• 1. (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-

  • 2. (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

  • 3. வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

  • 4. முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

  • 5. ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

  • 6. பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;

  • 7. அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.

  • 8. அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.

  • 9. அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.

  • 10. "நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.

  • 11. "மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"

  • 12. "அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.

  • 13. ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-

  • 14. அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.

  • 15. (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?

  • 16. `துவா` என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,

  • 17. "நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."

  • 18. இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.

  • 19. "அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).

  • 20. ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.

  • 21. ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.

  • 22. பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.

  • 23. அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.

  • 24. "நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.

  • 25. இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.

  • 26. நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.

  • 27. உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.

  • 28. அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.

  • 29. அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.

  • 30. இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.

  • 31. அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.

  • 32. அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.

  • 33. உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

  • 34. எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,

  • 35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

  • 36. அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

  • 37. எனவே, எவன் வரம்பை மீறினானோ -

  • 38. இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

  • 39. அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

  • 40. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,

  • 41. நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.

  • 42. (நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.

  • 43. அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

  • 44. அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

  • 45. அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,

  • 46. நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.

பகிர்
logo
logo
logo
logo